ரிஷிவந்தியம் தொகுதியில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்
செய்யப்பட்டுள்ளது.இது குறித்து சென்னை, விருகம்பாக்கத்தைச் சேர்ந்த எம். ஜெயந்தி என்பவர் தாக்கல் செய்த மனு: கடந்த தமிழக சட்டப் பேரவைத் தேர்தலின்போது ரிஷிவந்தியம் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடுவதற்காக 26.3.2011 அன்று நான் மனு தாக்கல் செய்தேன். 28.3.2011 அன்று நடைபெற்ற மனுக்கள் மீதான பரிசீலினையின்போது, முன்மொழிபவர்களின் பெயர்கள் மற்றும் வாக்காளர் பட்டியலில் உள்ள அவர்களின் வரிசை எண்கள், கையொப்பம் சரிவர குறிப்பிடப்படவில்லை என்றும், அவர்களின் இடது கை பெருவிரல் ரேகை மனுவில் பெறப்படவில்லை என்றும் தேர்தல் நடத்தும் அதிகாரி கூறினார். அந்தக் குறைகளை சரி செய்வதற்காக சற்று கால அவகாசம் தரும்படி நான் வேண்டுகோள் விடுத்தேன். எனினும், எனக்கு எந்த வாய்ப்பும் தராமல் மனுவை நிராகரிப்பதாக தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவித்து விட்டார். இது குறித்து மறுநாள் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் நான் முறையிட்டேன். எனது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது செல்லாது என அறிவிக்குமாறு அவரிடம் வேண்டினேன். எனினும், அத்தகைய எந்த உத்தரவையும் அவர் பிறப்பிக்கவில்லை. தேர்தலில் போட்டியிட மனு செய்துள்ள வேட்பாளருக்கு வாய்ப்பு தராமல், அவரது வேட்பு மனுவை நிராகரிக்கக் கூடாது என்று ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. எனவே, எனக்கு எந்த வாய்ப்பும் தராமல், எனது வேட்பு மனுவை நிராகரித்த ரிஷிவந்தியம் தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியின் உத்தரவு செல்லாது என்றும், அந்தத் தொகுதியில் விஜயகாந்த் வெற்றி பெற்றது செல்லாது என்றும் நீதிமன்றம் அறிவிக்க வேண்டும் என்று மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment