தலைமறைவாக இருக்கும் லிபியா அதிபர் கடாபியை உயிரோடோ பிணமாகவோ பிடிக்க உதவுபவர்களுக்கு
ரூ.8 கோடி பரிசு தருவதாக
புரட்சி படை அறிவித்துள்ளது.
லிபியாவில் கடந்த 41 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருக்கும் கடாபியை எதிர்த்து
கிளர்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த கிளர்ச்சி தீவிரம் அடைந்து வரும் நிலையில் புரட்சி படைகள் தலைநகர் திரிபோலி
உள்ளிட்ட பகுதிகளை கைப்பற்றி உள்ளன. திரிபோலி புரட்சி படைகள் வசமாகி விட்டதால்அந்நாட்டு
அதிபர் கடாபி தலைமறைவாகிவிட்டார். இதனையடுத்து புரட்சி படையினர் கடாபியை தேடி வருகின்றனர்.
அவரது சொந்த ஊரை நோக்கி புரட்சி படைகள் விரைந்துள்ளனர். அங்கு புரட்சி படைகள் மற்றும் கடாபி ஆதரவாளர்களிடையே
கடும் சண்டை மூண்டிருக்கிறது. இதனிடையே கடாபியை உயிரோடோ அல்லது பிணமாகவோ பிடிக்க உதவுபவர்களுக்கு பரிசு தருவதாக புரட்சி படை அறிவித்துள்ளது. கடாபி மறைவிடம் பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.8 கோடி பரிசு தரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே லிபியாவின் 90 சதவீத பகுதி புரட்சி படை வசம் வந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே கடாபியின் மகன் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டார். இதனிடையே தலைமறைவாகி உள்ள கடாபி விடுத்துள்ள செய்தி ஒன்றில், தான் சரண் அடைய மாட்டேன் என்றும் இறுதிவரை போராடுவேன் என்றும் ஆவேசமாக கூறி உள்ளார். ஒன்று, புரட்சி படையினரை விரட்டி அடிப்பேன் அல்லது வீரனாக மரணம் அடைவேன் என்று அவர் தெரிவித்துள்ளார். லிபியாவில் நடைபெற்று வரும் சம்பவங்களை சர்வதேச நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன. முடக்கப்பட்டுள்ள கடாபியின் சொத்துக்களை புரட்சி படையினர் வசம் ஒப்படைப்பது குறித்த பேச்சுக்களும் நடைபெற்று வருகின்றன.
No comments:
Post a Comment