டெல்லி ராம்லீலா மைதானத்தில் 7 நாட்கள்
உண்ணாவிரதம் இருக்க அன்னா ஹசாரேக்கு போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர்.
ஹசாரே கைதுக்கு நாடு முழுவதும் கண்டனம் எழுந்தது. பா.ஜ. கம்யூனிஸ்ட் கட்சிகள் போராட்டங்கள் அறிவித்தன. டெல்லி, பஞ்சாப், மகாராஷ்டிரா உட்பட பல மாநிலங்களில் ஹசாரே ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தால் நாடாளுமன்றமும் முடங்கியது. இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு ஹசாரே விடுதலை செய்யப்பட்டார். ஆனால், உண்ணாவிரதத்துக்கு போலீசார் நிபந்தனையற்ற அனுமதி தரும் வரை சிறையில் இருந்து வெளியேற ஹசாரே மறுத்து விட்டார். தகவல் அறிந்து ஹசாரே ஆதரவாளர்களும் திகார் சிறைக்கு வெளியே குவியத் தொடங்கினர். ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்று கருதிய போலீசார் ஹசாரே குழுவினருடன் நேற்று காலை முதல் பேச்சு நடத்தினர். இதில் ராம்லீலா மைதானத்தில் 7 நாட்கள் உண்ணாவிரதம் இருக்க ஹசாரேயை அனுமதிப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு அனுமதி நீட்டிக்கப்படும் என்றும் போலீசார் கூறியதாக தெரிகிறது. இதை ஹசாரே ஏற்கவில்லை. இது குறித்து சிவில் சொசைட்டி உறுப்பினரான கிரண் பேடி கூறுகையில், ‘‘போலீசாரின் யோசனையை நாங்கள் ஏற்கவில்லை. ஒரு மாதம் உண்ணாவிரதத்துக்கு ஹசாரே அனுமதி கோருகிறார்’’ என்றார். இதனால், முட்டுக்கட்டை நீடிக்கிறது. இருதரப்பு பேச்சுவார்த்தை நேற்று இரவும் நீடித்தது. முன்னதாக, திகார் சிறையில் ஹசாரேயை வாழும் கலை அமைப்பின் தலைவர் ரவிசங்கர் குருஜி சந்தித்து பேசினார். பாபா ராம்தேவ் திகார் சிறை வாசலில் குவிந்திருந்த ஹசாரே ஆதரவாளர்களிடையே பேசினார். ஹசாரேயின் கைதுக்கு கண்டனம் தெரிவித்து ஜனாதிபதியிடம் ராம்தேவ் மனு அளித்தார்.
No comments:
Post a Comment