ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் சிறைத்
தண்டனை அனுபவித்து வரும் நளினி, மீண்டும் வேலூர்
பெண்கள் மத்தியச் சிறைக்கு புதன்கிழமை மாற்றம் செய்யப்பட்டார்.
வேலூர் சிறையில் அவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் வரை இருந்தார். அப்போது போதுமான பாதுகாப்பு இல்லை என்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நளினி சென்னை புழல் சிறைக்கு 2010 ஜூன் 28-ம் தேதி மாற்றப்பட்டார். இந்நிலையில், திடீரென சென்னை புழல் சிறையில் இருந்து வேலூர் மத்தியச் சிறைக்கு புதன்கிழமை காலை நளினி மாற்றம் செய்யப்பட்டார். பலத்த பாதுகாப்புடன் வேலூர் மத்திய பெண்கள் சிறைக்கு காலை 10 மணியளவில் அவர் அழைத்து வரப்பட்டார். வேலூர் சிறைக்கு மீண்டும் நளினி மாற்றப்பட்டது குறித்து சிறைத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, அவரது விருப்பத்தின் பேரிலேயே மத்தியச் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார் என தெரிவித்தனர். இதுதொடர்பாக நளினி வழக்கறிஞர் ப.புகழேந்தியிடம் கேட்டபோது, "நளினி சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்ட பிறகு தனது கணவர் முருகனை 15 நாளைக்கு ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு இல்லாமல் போனது. இந்நிலையில் முருகன் உள்ளிட்ட மூவருக்கு தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்டதை அடுத்து தன்னை வேலூர் பெண்கள் மத்தியச் சிறைக்கு மாற்ற வேண்டும் என மனு கொடுத்திருந்தார். அதனடிப்படையில் இப்போது சிறைத் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்' என்றார்.
No comments:
Post a Comment