ரேஷன் அட்டை, ஓட்டுனர் உரிமம் உள்ளிட்டவற்றை குறித்த காலத்தில் வினியோகம் செய்யாத அரசு அதிகாரிகளுக்கு அபராதம் விதிக்கும் நடைமுறை,
வரும் 15ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. நாட்டு மக்களுக்குரிய பணிகளை குறித்த காலத்தில் செய்து முடிக்காத அரசு ஊழியர்களுக்கு அபராதம் விதிக்கும் சட்டத்தை, டில்லி சட்டசபை கடந்த மார்ச் மாதம் நிறைவேற்றியது. அன்னா ஹசாரே போராட்டத்தின் எதிரொலியாக, இந்த சட்டம் இம்மாதம் 15ம் தேதியிலிருந்து அமலாகிறது. பிறப்பு, இறப்பு சான்றிதழ், ரேஷன் அட்டை வழங்குதல், ஓட்டுநர் உரிமம் வழங்குதல் உள்ளிட்ட பணிகளை உரிய காலத்தில் செய்யாவிட்டால், ஒவ்வொரு நாட்களுக்கும் 10 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். அதிகபட்சமாக 5,000 ரூபாய் வரை அபராதம் விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்க, ஒரிரு நாட்களுக்கு மேல் கடத்தக்கூடாது. பழகுனர் உரிமம் விண்ணப்பிக்கப்பட்ட அன்றே வழங்க வேண்டும். ரேஷன் அட்டை விண்ணப்பித்த 45 நாட்களில் வழங்கப்பட வேண்டும். பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்குவது ஒரு வாரத்திற்கு மேல் போகக்கூடாது என, விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்த விதிமுறையை மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி, டில்லி காவல்துறைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment