உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப்
போட்டியிடுவதால் காங்கிரடனா உறவில் பாதிப்பு இல்லை என்று முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி கூறியுள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் வியாழக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
உள்ளாட்சித் தேர்தலில் தனியாக நிற்க முடியும் என்ற தைரியத்தில்தான் தனித்துப் போட்டியிடுகிறோம். இது தாமதமாக எடுக்கப்பட்ட முடிவு அல்ல.
திமுகவைப் பொருத்தவரையில் மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தல் ஆகியவற்றில் கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொள்வதில் எந்தவிதமான பின்வாங்கலும் இல்லை.உள்ளாட்சி அமைப்பு என்பது பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை முன்வைத்து பணிகள் ஆற்றக்கூடியதாக உள்ளதால் இதில் அரசியலைக் கலக்கத் தேவையில்லை என்ற முடிவினை எடுத்திருக்கிறோம். மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தல் போன்ற நேரங்களில்தான் காங்கிரசுடன் உறவு தேவைப்படும். அப்போதெல்லாம் எங்களுடைய உறவு முறியாது. நீடிக்கும். மத்திய அரசோடு நாங்கள் உறவோடு இருக்கிறோம். காங்கிரஸ் கட்சி தலைமையிடத்திலிருந்து யாரும் பேசவில்லை. காங்கிரசுடன் உறவு இல்லை என்று நாங்கள் சொல்லவில்லை. உள்ளாட்சி மன்றத் தேர்தல்களில் கூட்டணி இல்லை. தனித்து நிற்கிறோம் என்று, அறிக்கையில் தெளிவாகக் கூறியிருக்கிறோம்.உள்ளூர் விவகாரங்களைப் பொருத்தவரையில் யாராவது யோசனை சொன்னால் அதை ஏற்றுக்கொள்வோம். அதன்படி நடக்க அவர்களோடு இணைந்து பாடுபடுவோம்.மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு நேர்ந்த அவமானத்தை யாராலும் பொறுத்துக் கொள்ள முடியாது. மக்களுக்கு ஆற்ற வேண்டிய பணியைத் திட்டமிடுவதற்காகத்தான் மாவட்ட ஆட்சியர்களோடு அவருடைய நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.அந்தப் பணியை நிறைவேற்ற வேண்டிய ஆட்சியர்களே நிகழ்ச்சியைப் புறக்கணிக்கும் அளவிற்கு நடந்து கொண்டார்கள் என்பது இங்கேயுள்ள மேலிடத்தின் கட்டாயம் என்பதை உணர்ந்து மிகவும் வருந்துகிறேன்.அந்த அறிக்கைகள் ஒவ்வொன்றைப் பற்றியும் தேவைப்பட்டால் விமர்சிக்க முடியும். ஆனால் பொதுவான கருத்து எதையும் சொல்ல இயலாது. தணிக்கைத் துறை அதிகாரிகள் ஆரம்பத்தில் கோடிக்கணக்கில் நட்டம் என்று அறிக்கை வெளியிட்டனர். பிறகு அது யூகிக்கப்பட்ட தொகை என்றனர். இப்போது நட்டம் என்பதையே கேள்விக்குறியாகச் சொல்கின்றனர்.கனிமொழிக்கும் அலைக்கற்றை ஒதுக்கீட்டிற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. கலைஞர் தொலைக்காட்சியில் கனிமொழி ஒரு பங்குதாரர் மட்டுமே. பொதுவாக பங்குதாரர்களை எந்தவொரு நிறுவனத்தின் இதுபோன்ற நடவடிக்கைகளில் இணைத்து வழக்கு போடுவது வழக்கம் இல்லை. இது தொடர்பாக வழக்குரைஞர்கள் சி.பி.ஐ. நீதிமன்றத்தில் மிகத் தெளிவாக விளக்கியிருக்கின்றனர் என்றார் கருணாநிதி.
No comments:
Post a Comment