தமிழகத்தில் மின்பற்றாக்குறையை சமாளிக்க மத்திய தொகுப்பில் இருந்து 1000 மெகாவாட் கூடுதலாக ஒதுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து பிரதமருக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.தமிழக
மக்கள் கடுமையான மின்பற்றாக்குறையை சந்தித்து வருகின்றனர். மின்பற்றாக்குறையால் தொழில்துறையினரும், உள்நாட்டு நுகர்வோர்களும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய பம்புசெட்டுகளுக்கு போதிய மின்சாரம் வழங்க முடியாததால் விவசாயம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் உணவு உற்பத்திக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கூடுதல் மின்சாரம் உற்பத்தி செய்ய ஒன்று முதல் இரண்டு ஆண்டுகள் வரை ஆகலாம். பல்வேறு புதிய மின்திட்டப் பணிகள் கட்டுமான நிலையில் உள்ளன. கூடங்குளம் அணுமின் நிலையம் மற்றும் நெய்வேலி அனல்மின் நிலையம்-2ம் நிலை விரிவாக்கம் போன்ற மத்திய மின் திட்டங்கள் 2009-ம் ஆண்டுக்குள் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த மின்திட்டங்கள் இதுவரை முடிவடையவில்லை. இதனால் தமிழகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மின் தேவைக்கும், விநியோகத்துக்கும் உள்ள இடைவெளியைக் குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறேன். இந்த முயற்சிகள் ஒருபக்கம் இருந்தாலும், கூடுதல் மின் உற்பத்தி இல்லாததன் காரணமாக மேலும் சில காலத்துக்கு பற்றாக்குறை தொடரும் என அஞ்சுகிறேன்.எனவே நீங்கள் தலையிட்டு ஜூன் 2011 முதல் மே 2012 வரை மத்திய தொகுப்பில் இருந்து 1000 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக ஒதுக்க வேண்டும்.மேலும் தமிழகத்தில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் மத்திய மின்திட்டங்களை விரைந்து முடிக்க தாங்கள் அறிவுறுத்த வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment