மூன்றாம் கண்.,: சுடிதார் அணிந்து சுமார் ஒரு மணி நேரம் போலீஸாரின் கண்களில் மண்ணைத் தூவிய யோகா குரு பாபா ராம் தேவ்

Pages

Sunday, June 5, 2011

சுடிதார் அணிந்து சுமார் ஒரு மணி நேரம் போலீஸாரின் கண்களில் மண்ணைத் தூவிய யோகா குரு பாபா ராம் தேவ்




யோகா குரு பாபா ராம் தேவின் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது போலீஸார் திடீரென தடியடி நடத்தி, கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். தில்லி ராம்லீலா மைதானத்தில் சனிக்கிழமை நள்ளிரவில் நடத்தப்பட்ட இந்த திடீர் தாக்குதலில்
பெண்கள் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். உண்ணாவிரதப் பந்தலில் இருந்து பாபா ராம் தேவ் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு சிறப்பு விமானத்தில் டேராடூனுக்கு கொண்டு செல்லப்பட்டார். ஊழலை எதிர்த்து உண்ணாவிரதம்: ஊழலை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும், வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை தேசிய சொத்து என அறிவித்து உடனடியாக நாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து யோகா குரு பாபா ராம் தேவ் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை தில்லியில் சனிக்கிழமை காலையில் தொடங்கினார். அவரிடம் மத்திய அரசின் பிரதிநிதிகள் பேச்சு நடத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் கபில் சிபல், பாபா ராம் தேவின் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். ஆனால், தனது கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக உறுதியளிக்க வேண்டும், அதுவரை உண்ணாவிரதம் தொடரும் என்று பாபா ராம்தேவ் திட்டவட்டமாக அறிவித்தார். நள்ளிரவில் திடீர் தடியடி: தில்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற போராட்டத்தில் பாபாவுக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்தனர். நள்ளிரவில் அவர்கள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தபோது, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் உண்ணாவிரதப் பந்தலை முற்றுகையிட்டனர். அங்கிருந்து அனைவரும் வெளியேறும்படி போலீஸார் உத்தரவிட்டனர். ஆனால், ஒருவரும் அசையவில்லை. ஒவ்வொருவரையும் வலுக்கட்டாயமாக இழுத்து போலீஸார் வெளியே தள்ளினர். ஆனாலும், கூட்டம் கலையவில்லை. ஆத்திரமடைந்த போலீஸார், நாலாபுறமும் தடியடி நடத்தினர். இதில் பலர் காயமடைந்தனர். அதன்பின்னரும் மக்கள் அங்கேயே குழுமி நின்றதால், தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும், கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும், ஆக்ரோஷமாக தடியடி நடத்தினர். இதில், பெண்கள், வயதானவர்கள் மயங்கி விழுந்தனர். சிறார்களும் காயமடைந்தனர்.  பெண் வேடத்தில் பாபா: பாபா ராம் தேவ்வைப் பிடிக்க நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் மேடையில் ஏறினர். அவர்களிடம் இருந்து தப்பிய பாபா, மக்களோடு மக்களாக கூட்டத்தில் கலந்து விட்டார்.  கூட்டத்தினரை தடியடி நடத்திக் கலைத்து பாபாவை போலீஸார் தேடினர். நீண்ட தேடுதலுக்குப் பின்னர் மாறுவேடத்தில் இருந்த பாபாவை போலீஸார் கண்டுபிடித்தனர். வெள்ளை நிற சுடிதார் அணிந்து, தாடியைத் துப்பட்டாவால் மறைத்து சுமார் ஒரு மணி நேரம் போலீஸாரின் கண்களில் மண்ணைத் தூவி அவர் கூட்டத்தில் மறைந்திருந்தார். அவரை தேடிக் கண்டுபிடித்த போலீஸார், தில்லியில் உள்ள ரகசிய இடத்துக்கு கொண்டு சென்றனர். அதைத் தடுக்க முயன்ற ஆதரவாளர்கள் மீது கண்மூடித்தனமாக தடியடி நடத்தப்பட்டது. வலுக்கட்டாயமாக வெளியேற்றம்: தில்லி சப்தர்ஜங் விமான நிலையத்தில் இருந்து பாபாவை, டேராடூனுக்கு அழைத்துச் செல்ல போலீஸார் திட்டமிட்டிருந்தனர். இந்த தகவல் அறிந்து பெருந்திரளான மக்கள், சப்தர்ஜங் விமான நிலையம் முன்பு குவிந்தனர். உடனே திட்டத்தை மாற்றிய போலீஸார், இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிறப்பு விமானம் மூலம் அவரை டேராடூனில் கொண்டு விட்டனர். தனிஆளாக இறங்கிய அவரை உத்தரகாண்ட் அரசு அதிகாரிகள் வரவேற்று அழைத்துச் சென்றனர். டேராடூனில் இருந்து தனது ஆஸ்ரமம் அமைந்துள்ள ஹரித்வாருக்கு பாபா காரில் சென்றார்.  இதனிடையே, அடுத்த 15 நாள்களுக்கு அவர் தில்லியில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. மீண்டும் கூடிய மக்கள்: பாபாவை வலுக்கட்டாயமாக வெளியேற்றியதைக் கண்டித்து அவரது ஆதரவாளர்கள் தில்லியில் பல இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் விரட்டியடித்தனர். ஞாயிற்றுக்கிழமை காலை தில்லி ராம் லீலா உண்ணாவிரதப் பந்தலில் மீண்டும் பெருந்திரளமான மக்கள் கூடினர். அவர்கள் மைதானத்துக்குள் நுழைய முடியாதபடி தடுப்புகளை அமைத்து போலீஸார் தடுத்தனர்.  செய்தி சேகரிக்கச் சென்ற நிருபர்களையும் போலீஸார் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். ஆர்ப்பாட்டத்தைப் படம் பிடித்த சில கேமராமேன்களின், கேமராக்கள் பறிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. சனிக்கிழமை நள்ளிரவில் போலீஸார் நடத்திய தடியடியில் பெண்கள் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர். அவர்களில் சிலர், தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். வெறிச்சோடிய மைதானம்: உண்ணாவிரதம் நடைபெற்ற ராம் லீலா மைதானம் முழுவதும் செருப்புகளும், ரத்தக்கறை படிந்த ஆடைகளும் சிதறிக் கிடந்தன. போராட்டத்தில் பங்கேற்ற மக்களின் உடைமைகளும் ஆங்காங்கே வீசியெறியப்பட்டிருந்தன. மைதானம் ஞாயிற்றுக்கிழமை வெறிச்சோடி காணப்பட்டது. ஏராளமான போலீஸார் அங்கு பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம்: பாபா மீதும், அவரது ஆதரவாளர்கள் மீதும் போலீஸார் நடத்திய கொடூர தாக்குதலைக் கண்டித்து நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. வடஇந்தியாவில் பல்வேறு இடங்களில் சாலை மறியல், உருவ பொம்மை எரிப்பு, ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. போராட்டங்களில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்தனர். சரியான காரணங்களைக்கூறி வாரண்டுடன் வந்து என்னை கைது செய்யத் தயாரா? என்று அரசுக்கு ராம்தேவ் சவால் விடுத்தார். தில்லி ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்த பாபா ராம்தேவ் சனிக்கிழமை நள்ளிரவில் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டார். தற்போது அவர் ரகசியமாக ஓர் இடத்தில் இருந்தபடி தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றுக்குப் பேட்டியளித்துள்ளார். அந்தப் பேட்டியில் அவர் கூறியதாவது: ராம்லீலா மைதானத்தில் போலீஸார் நடந்து கொண்ட விதம் துரதிருஷ்டவசமானது. எனது ஆதரவாளர்கள் மீது போலீஸார் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். இது கண்டனத்துக்குரியது. அவர்கள் எந்தத் தவறும் செய்யவில்லை. அவர்களை போலீஸார் ஏன் தண்டிக்க வேண்டும்? இதுவரை எந்த காவல் துறை அதிகாரியும் என்னைத் தொடர்பு கொண்டு பேசவில்லை.  பிரதமர் மன்மோகன்சிங்கை நான் கேட்டுக் கொள்கிறேன், என்னை கைது செய்ய வேண்டும் என்று அரசு நினைத்தால் சரியான காரணங்களுடன், வாரண்டுடன் வந்து என்னை கைது செய்யத்தயாரா? போலீஸார் பகல் நேரத்தில் இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும்.  நள்ளிரவு நேரத்தில் திருடன்போல போலீஸார் வந்து ஏன் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்? போலீஸாரின் இந்த நடவடிக்கையை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார் ராம்தேவ்.

Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...