ஊழல் ஒழிப்புத் தொடர்பாக ஆலோசனை நடத்த அமைக்கப்பட்ட மத்திய அமைச்சர்கள் குழுக் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் ஆகியோர் பங்கேற்கவில்லை.
ஊழலை ஒழிக்கவும், ஊழலில் ஈடுபடுவோர் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வசதியாக அரசுக்கு பரிந்துரை செய்ய நிதி அமைச்சர் பிரணாப்முகர்ஜி தலைமையில் அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டது. அக்குழுவில் ப.சிதம்பரம், சரத்பவார், ஏ.கே.அந்தோனி, எம்.வீரப்ப மொய்லி, கபில் சிபல் மற்றும் மு.க.அழகிரி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். அக்குழுவின் கூட்டம் தில்லியில் வியாழக்கிழமை நடந்தது. இதில் சிதம்பரமும், கபில் சிபலும் கலந்து கொள்ளவில்லை.அந்த சமயத்தில் இவர்கள் இருவரும் லோக்பால் வரைவுச் சட்டம் தொடர்பாக தில்லியில் நிருபர்களுக்குப் பேட்டியளித்துக் கொண்டிருந்தனர். அமைச்சர்கள் குழுக் கூட்டம் சிறிது நேரமே நடைபெற்றது. அரசு ஊழியர்கள் மீதான ஊழல் புகார்களை விரைந்து விசாரிப்பது, வெளிப்படையாக விசாரணை நடைபெறுதல், பொதுப்பணிகளை காண்ட்ராக்ட் விடுவதில் வெளிப்படை உள்பட 7 அம்சங்கள் குறித்து இந்தக்குழு விவாதித்து அரசுக்கு பரிந்துரை அளிக்கவுள்ளது.
No comments:
Post a Comment