சமச்சீர் கல்விக்கான படங்களின் தரம் குறித்து ஆராய, உச்சநீதிமன்ற உத்தரவுக்கு இணங்க 9 பேர் அடங்கிய குழு ஒன்றை நியமித்துள்ளது தமிழக அரசு. இந்த நிபுணர் குழுவின்
தலைவராக, தமிழக அரசின் தலைமை செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி இருப்பார். இந்த நிபுணர் குழு சமச்சீர் கல்விக்கான பாடங்களை ஆராய்ந்து, தன்னுடைய அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் வரும் ஜூலை மாதம் 6 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கும்.முந்தைய திமுக அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்வியை நிறுத்தி வைக்க அதிமுக அரசு முடிவு செய்தது. சமச்சீர் கல்விக்கான பாடத்திட்டங்கள் தரமானதாக இல்லை என்று அதற்கு காரணம் கூறியது அதிமுக அரசு. இதுதொடர்பாக சட்டசபையில் சமச்சீர் கல்வி சட்ட திருத்த மசோதாவையும் கொண்டுவந்தது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம், சமச்சீர் கல்வி சட்ட திருத்த மசோதாவுக்கு இடைக்காலத் தடை விதித்தது. மேலும், அதிமுக அரசு பதவி ஏற்ற சில நாட்களில், நிபுணர் குழு எதுவும் அமைக்கப்படாமல், சமச்சீர் கல்விக்கான பாடத்திட்டங்கள் எவ்வாறு தரமற்றவை என்று கூறமுடியும்? என்று கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம், சமச்சீர் கல்வியை நிறுத்தி வைக்கும் அதிமுக அரசின் முடிவுக்கு அரசியல் உள்நோக்கம் இருப்பதாக கருத்து தெரிவித்து இருந்தது. சென்னை உயர்நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடையை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், 1 மற்றும் 6 ஆகிய வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி தொடர வேண்டும் என்றும், மற்ற வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி தொடரவேண்டுமா என்பது குறித்து ஆராய தமிழக அரசின் தலைமைச் செயலாளர் தலைமையில் நிபுணர் குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்றும், அந்த நிபுணர் குழு சமச்சீர் கல்விக்கான பாடத்திட்டங்களை ஆராய்ந்து, தன்னுடைய அறிக்கையை வரும் ஜூலை மாதம் 6 ஆம் தேதிக்குள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு இணங்க, தமிழக அரசு, தலைமைச் செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி தலைமையில் 9 பேர் அடங்கிய நிபுணர் குழுவை அமைத்துள்ளது. நேற்று கூடிய இந்த குழு சமச்சீர் கல்விக்கான புத்தகங்களைக் கொண்டு பாடத்திட்டங்களை ஆராயத் தொடங்கியது.
No comments:
Post a Comment