மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 3வது ஒரு நாள் போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்று 5 போட்டிகள் கொண்ட தொடரைக் கைப்பற்றியுள்ளது.
மேற்கு இந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி (உண்மையைச் சொல்வதாக இருந்தால் 2ம் நிலை அணி) முதலில் டுவென்டி 20 போட்டியை வென்று மேற்கு இந்தியத் தீவுகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது. தற்போது ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடி வருகிறது இந்தியா. முதல் 2 போட்டிகளில் அழகாக வென்ற இந்தியா நேற்று 3வது போட்டியையும் வென்று தொடரைக் கைப்பற்றி விட்டது.
பந்து வீச்சில் அமித் மிஸ்ரா அபாரமாக கலக்க, பேட்டிங்கில் ரோஹித் சர்மா ஆட்டமிழக்காமல் 86 ரன்களைக் குவித்து வெற்றியைப் பெற காரணமாக அமைந்தனர்.முதலில் ஆடிய மேற்கு இந்தியத் தீவுகள் அணி 225 ரன்களை எடுத்தது. அந்த அணியை மோசமான நிலையிலிருந்து மீட்டு கெளரவமான ஸ்கோரை எட்ட ரஸ்ஸல்ஸ் உதவினார். பின்னர் ஆடிய இந்தியா ஆரம்பத்தில் சறுக்கியது. ஒரு கட்டத்தில் 6 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் என்ற கேவலமான நிலையில் இந்தியா இருந்தது.இருப்பினும் ரோஹித் சர்மா அபாரமாக ஆடி அணியை மீட்டு வெற்றிப் பாதைக்குத் திருப்பி விட்டார். 91 பந்துகளைச் சந்தித்த அவர் ஆட்டமிழக்காமல் 86 ரன்களை விளாசினார். அதேபோல ஹர்பஜன் சிங்கும் சிறப்பாக ஆடி 41 ரன்களைக் குவித்து அணிக்கு உதவினார். இறுதியில், 22 பந்துகள் மீதமிருந்த நிலையில் 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
No comments:
Post a Comment