சுவிஸ் நாட்டு வங்கிகளில் கருப்பு பணம் பதுக்கியுள்ள இந்தியர் உள்பட வெளிநாட்டினர் பட்டியலை வெளியிட அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கான வங்கி சட்ட திருத்தத்துக்கு அந்நாட்டின் மேலவை ஒப்புதல் அளித்துள்ளது. வெளிநாட்டு வங்கிகளில் குறிப்பாக சுவிஸ் நாட்டு வங்கிகளில் இந்தியர்கள் ஏராளமாக கருப்பு பணம் பதுக்கி வைத்திருப்பதாக நீண்ட நாட்களாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. சுமார் ரூ.2 லட்சம் கோடி கருப்பு பணம் வெளிநாட்டு வங்கிகளில் தூங்கிக் கொண்டிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.இது தொடர்பாக சில மாதங்களுக்கு முன்பு பிரபல கிரிமினல் வக்கீல் ராம் ஜெத்மலானி உள்ளிட்ட சிலர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட சுப்ரீம் கோர்ட்,"வெளிநாட்டில் பதுக்கப்பட்டிருக்கும் கருப்பு பணத்தை மீட்க மத்திய அரசு இதுவரை எடுத்த நடவடிக்கை என்ன?" என்பது பற்றி கடுமையான கேள்விகளை எழுப்பியது.இதைத் தொடர்ந்து கருப்பு பணம் பதுக்கப்பட்டிருப்பதாக கருதப்படும் சுவிட்சர்லாந்து, ஜேர்மன் போன்ற நாடுகளுக்கு இந்திய அரசு கடிதம் எழுதியது. இதன் விளைவாக ஜேர்மன் நாட்டின் "லிட்சய்ஸ்டைன்" வங்கியில் டெபாசிட் செய்துள்ள 14 இந்தியர்களின் பட்டியலை அந்த வங்கி இந்தியாவிடம் ஒப்படைத்தது. வரிவிதிப்பு பிரச்னை முடிந்தவுடன் இந்தப் பட்டியலில் இடம் பெற்றிருப்பவர்களின் பெயர்கள் வெளியிடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. சுவிஸ் நாட்டின் வங்கி தொடர்பான சட்ட திட்டங்கள் கருப்பு பணம் பதுக்கியவர்களுக்கு சாதகமாக இருக்கிறது. இதனால் அந்நாட்டு வங்கிகளிடமிருந்து கருப்பு பணம் பதுக்கியவர்களின் தகவல்களை பெறுவதில் சிரமம் இருப்பதாக மத்திய நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.இந்த சட்டம் அமலுக்கு வந்தால் இந்தியா, ஜேர்மனி, கனடா, ஜப்பான், ஹாலந்து, கிரீஸ், துருக்கி, உருகுவே, கஜகஸ்தான் மற்றும் போலந்து ஆகிய நாடுகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
சுவிஸ் நாடு மற்ற நாடுகளுடன் செய்து கொண்டுள்ள இரட்டை வரி ஒப்பந்தத்தில் வங்கி டெபாசிட்கள் சேர்க்கப்படவில்லை. இதனால் அந்நாட்டு வங்கிகளில் டெபாசிட் செய்துள்ளவர்களின் விவரங்களை மற்ற நாடுகளால் பெறமுடியாத நிலை இருந்தது. தற்போது சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்திருப்பதன் வாயிலாக இந்த விவரங்களை பாதிக்கப்பட்ட நாடுகள் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment