திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் பொறியியல் மாணவியை மிரட்டி காரில் கடத்திய இன்ஸ்பெக்டரை போலீசார் கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை சேர்ந்தவர் தாரணி.
இவர் ஈரோடு மாவட்டத்தில் விடுதியில் தங்கி ஒரு கல்லூரியில் பொறியியல் படித்து வந்தார். தாரணி தோழியின் சகோதரர் ஜெயகாந்தன். தாரணியும் ஜெயகாந்தனும் நண்பர்களாக பழகி வந்தனர். இந்தநிலையில் கடந்த 25-ந் தேதி தாரணி கல்லூரியில் இருந்து பஸ்சில் வீட்டுக்கு சென்றார். அப்போது அவருடன் ஜெயகாந்தனும் வருவதாக கூறினார். இதையடுத்து 2 பேரும் திருச்சி மத்திய பஸ் நிலையத்துக்கு வெளியே ஓர் இடத்தில் நின்று பேசி கொண்டு இருந்தனர். அப்போது அங்கு திருச்சி தீண்டாமை தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் கண்ணன் காரில் வந்தார். அவர், அங்கு நின்ற இவர்கள் 2 பேரையும் அழைத்து தான் போலீஸ் என்றும், இங்கு என்ன? செய்கிறீர்கள் என்று மிரட்டினார். அதன்பிறகு ஜெயகாந்தனை பஸ்சில் ஏறி ஊருக்கு செல்லுமாறு விரட்டி அனுப்பினார். பின்னர் தாரணியிடம், "உன்னை பத்திரமாக கூட்டிச் சென்று இறக்கி விடுகிறேன்" என்று கூறி அவரை காரில் ஏற்றி நொடிப்பொழுதில் அங்கிருந்து காரை ஓட்டி சென்றார். இதனை தூரத்தில் இருந்து கண்ட ஜெயகாந்தன் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக இதுபற்றி கண்டோன்மெண்ட் போலீசில் தகவல் தெரிவித்தார். போலீசார் அனைத்து செக் போஸ்ட்டுகளிலும் தீவிர வாகன சோதனை நடத்தினார்கள். இந்தநிலையில் திருச்சி-புதுக்கோட்டை சாலையில் இருந்து தாரணி, ஜெயகாந்தனை போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது தன்னை அந்த நபர் புதுக்கோட்டை சாலையில் இறக்கி விட்டு சென்று விட்டதாக கூறினார். இதையடுத்து ஜெயகாந்தன் போலீசாருடன் புதுக்கோட்டை ரோட்டுக்கு சென்று தாரணியை மீட்டு வந்தனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீஸ் கமிசனர் மாசானமுத்து, இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளியை உடனடியாக பிடிக்க உத்தரவிட்டார். போலீசார் விசாரணை நடத்தியபோது இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டது போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் என்பதை போலீசார் கண்டுபிடித்து அவரை கைது செய்தனர். அவரை திருச்சி எண்-2 ஜுடீசியல் மாஜிஸ்திரேட் ராஜேந்திரன் வீட்டிற்கு கொண்டு சென்று ஆஜர் செய்தனர். அவரை 15 நாட்கள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அவர் திருச்சி மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். அவர் உடனடியாக சஸ்பெண்டும் செய்யப்பட்டார்.
No comments:
Post a Comment