நடிகர் பிரபுதேவாவுக்கும் அவரது மனைவி
ரமலத்தும் சென்னை குடும்ப நல நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது. இதனால் தனது
காதலி நடிகை நயன்தாராவை விரைவில் பிரபுதேவா திருமணம் செய்ய உள்ளார்.
குரூப் டான்சர் லதா என்ற ரமலத்தை காதலித்து கடந்த 9.8.2005 அன்று திருமணம் செய்துகொண்டார் நடிகர் பிரபுதேவா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில், நடிகை நயன்தாராவை காதலிக்க தொடங்கினார் பிரபுதேவா. இந்த பிரச்சனை விசுவரூபம் எடுத்ததால் பிரபுதேவாவும், ரமலத்தும் கடந்த 2010ஆம் ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி பரஸ்பரம் பிரிந்து செல்வதற்கான மனுவை சென்னை முதன்மை குடும்பநல நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். விவகாரத்து விதிமுறைப்படி, இருவருக்கும் 6 மாதம் காலஅவகாசம் கொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் நீதிபதி ராஜா சொக்கலிங்கம் நேற்று தீர்ப்பு அளித்தார். பிரபுதேவாவும், ரமலத்தும் பரஸ்பரமாக விவாகரத்து கோரி இருந்தனர். அவர்கள் தங்கள் நிலைப்பாட்டை உணர்ந்துகொள்வதற்காக அவர்களுக்கு 6 மாதம் காலஅவகாசம் கொடுக்கப்பட்டது. ஆனாலும், இருவரும் பரஸ்பரமாக பிரிந்து செல்வதில் உறுதியாக உள்ளனர். எனவே, அவர்களுக்கு பரஸ்பரம் விவாகரத்து அளிக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து, 9.8.1995 அன்று அவர்கள் இருவரும் செய்துகொண்ட திருமணம் செல்லாததாக அறிவிக்கப்படுகிறது. பிரபுதேவா, சென்னை அண்ணாநகர் மற்றும் கிழக்கு கடற்கரைச்சாலையில் உள்ள தனது 2 வீடுகளையும் ரலமத்துக்கு வழங்க வேண்டும். அதேபோல் ஜீவனாம்சமாக ரூ.10 லட்சம் கொடுக்க வேண்டும். மேலும், ஹைதராபாத்தில் உள்ள அவருடைய 3 வீடுகளை ரமலத் பயன்படுத்திக்கொள்ளலாம். அவற்றை விற்க முடியாது. இரண்டு குழந்தைகளும் மேஜர் ஆன பிறகு அவர்களின் பெயருக்கு வீடுகளை மாற்ற வேண்டும். மேலும் 2 குழந்தைகளின் கல்வி, பராமரிப்பு, மருத்துவ செலவு உள்ளிட்ட அடிப்படை செலவுகளை அவர்கள் வேலைக்கு செல்லும் வரை பிரபுதேவா ஏற்க வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பு அளித்தார். தீர்ப்பு உத்தரவை வாங்குவதற்கு ரமலத் மட்டும் வந்திருந்தார். ஆனால் பிரபுதேவா வரவில்லை. விவாகரத்து கிடைத்துவிட்டதால் காதலி நயன்தாராவை விரைவில் திருமணம் செய்ய உள்ளார் நடிகர் பிரபுதேவா.
No comments:
Post a Comment