ஜிப்மர் மருத்துவமனையில் கடத்தப்பட்ட
குழந்தையை, கோரிமேடு
போலீசார் கண்டுபிடித்தனர். அவர்களை சீனியர் எஸ்.பி., சந்திரன் பாராட்டினார்.
உளுந்தூர்பேட்டை தாலுகா கொண்டசமுத்திரத்தைச் சேர்ந்த லட்சுமணன் மனைவி மகேஸ்வரி. தலைப்பிரசவத்திற்காக புதுச்சேரி, ஜிப்மர் மருத்துவமனையில் கடந்த 4ம் தேதி சேர்ந்தார். மகேஸ்வரிக்கு மறுநாள் பெண் குழந்தை பிறந்தது. தாயுடன் வார்டுக்கு மாற்றப்பட்ட குழந்தை, கடந்த 8ம் தேதி காலை மாயமானது. புகாரின்பேரில், தன்வந்தரி நகர் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை விசாரணை மேற்கொண்டது. இந்நிலையில், அம்பத்தூரில் கால் டாக்சி ஓட்டிக் கொண்டிருக்கும் திருமலை என்பவர், சென்னை எழும்பூர் போலீஸ் நிலையத்தில், குரோம்பேட்டையைச் சேர்ந்த சுமித்ரா, 28, என்ற பெண், குழந்தையைக் கடத்தி இருக்கலாம் என, தகவல் அளித்துள்ளார். சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் இருந்து, புதுச்சேரி டி.நகர் போலீஸ் நிலையத்திற்குத் தகவல் கொடுக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார், சென்னை சென்று திருமலையின் உதவியுடன் குரோம்பேட்டை பகுதியில் விசாரணை செய்து, இறுதியில், நேற்று முன்தினம் இரவு, குரோம்பேட்டை அஸ்தினாபுரம் திருமலைநகர் 3வது குறுக்குத் தெருவில் உள்ள சுமித்ராவை கைது செய்து விசாரணை நடத்தினர். அவர் தன் குழந்தை அபார்ஷனில் இறந்து விட்டதால், தான் ஒரு குழந்தை பெற்றதாக நிரூபணம் செய்ய ஜிப்மர் மருத்துவமனையில் குழந்தையைத் திருடியதாக ஒப்புக் கொண்டார். அவரையும் அவருக்கு உதவிய அவரது இரண்டாவது கணவர் கிரிதர பிரசாத்தையும் போலீசார் கைது செய்தனர். போலீசார், மகேஸ்வரியிடம் குழந்தையை ஒப்படைத்தனர். இவ்வாறு சந்திரன் கூறினார். குழந்தையைக் கண்டுபிடித்த போலீசாரையும், தகவல் கொடுத்த டிரைவர் திருமலையையும் சீனியர் எஸ்.பி., சந்திரன் பாராட்டினார்.
No comments:
Post a Comment