கிரேட்டர் நொய்டா, ஜூலை 5: உத்தரப் பிரதேசத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி மற்றொரு போராட்டத்தில் களம் இறங்கியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் மாயாவதி தலைமையிலான அரசு தொழிற்சாலைகள் அமைப்பதற்காக, நொய்டா பகுதியில் நிலங்களை விவசாயிகளிடமிருந்து கட்டாயப்படுத்தி கையகப்படுத்துவதாக புகார்கள் எழுந்தன. இதற்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் குதித்தனர். இதையடுத்து, அந்நிலங்களில் குடியிருப்புகளை கட்டப் போவதாக மாயாவதி அறிவித்தார். விவசாயிகளுக்கு ஆதரவாக இரு மாதங்களுக்கு முன் பட்டா பர்செüல் வந்த காங்கிரஸ் பொது செயலாளர் ராகுல் காந்தி நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், பட்டா பர்சௌல் முதல் அலிகார் வரை செவ்வாய்க்கிழமை பாதயாத்திரை செல்லப் போவதாக ராகுல் காந்தி அறிவித்தார். கிஸôன் சந்தேஷ் யாத்ரா என பெயரிடப்பட்டுள்ள இந்த யாத்திரையின் மூலம் விவசாயிகளை சந்திக்க அவர் திட்டமிட்டிருந்தார். பாதயாத்திரையின் முதல் கட்டமாக கடந்த சனிக்கிழமை அலிகார் வந்த அவர் கிராம பஞ்சாயத்து நடத்த திட்டமிட்டிருந்தார். இதற்கு மாயாவதி அரசு அனுமதி அளிக்கவில்லை. எனினும், ராகுல் காந்தி திட்டமிட்டபடி செவ்வாய்க்கிழமை பாதயாத்திரையை தொடங்கினார். கயிற்றுக் கட்டிலில், பள்ளிக்கூட சீருடையில் உள்ள குழந்தையுடன் அமர்ந்து பஞ்சாயத்து நடத்தினார். பட்டா பர்சௌலில் பஞ்சாயத்து நடத்த அனுமதி மறுக்கப்படவே,அது அலிகாரில் நடத்தப்பட்டது. அப்போது அவர் விவசாயிகளிடம் கூறியது: பட்டா பர்செüலில் என்ன நடந்தது என்பது மற்றப் பகுதியிலுள்ளவர்களுக்குத் தெரியாது. இங்கிருந்து ஆக்ரா வரையில் நிலம் கையகப்படுத்துவது குறித்து தெரிந்து கொள்ள உள்ளேன். இதற்காக பட்டாவில் தொடங்கியுள்ளேன். எவ்வாறு விவசாயிகளிடமிருந்து நிலம் கையகப்படுத்தப்படுகிறது, அவை யாருக்காக கையகப்படுத்தப்படுகின்றன என்பதை அறிந்து கொள்ளவே யாத்திரையை தொடங்கி உள்ளேன். விவசாயிகளின் நலன்களை பாதுகாக்கவே பஞ்சாயத்து நடத்துகிறேன் என ராகுல் காந்தி தெரிவித்தார்.முன்னதாக, ராகுல் காந்தி, மிர்சாபூர்,ருஸ்தாம்பூர், ரோசா உள்ளிட்ட கிராமங்களுக்குச் சென்றார். நொய்டாவில் வரும் 9-ம் தேதி பொதுக் கூட்டத்தில் அவர் பேச உள்ளார். உத்தரப் பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment